திடீரென மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்... 3ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? ருதுராஜ் விளக்கம்!
நடப்பு ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் நேற்று மோதிய மூன்றாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை பெற்ற நிலையில், 156 ரன்கள் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் துரத்தியது.
அத்துடன், 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது, வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் வந்தனர்.

துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 2 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த நிலையில், மூன்றாவது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த ருதுராஜ் கெய்க்வாட் போட்டிக்கு பிறகு தனது பேட்டிங் ஆர்டர் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
இதயும் படிங்க: பொட்டு வெச்ச தங்கக்குடம்... தோனிக்கு ஃபினிஷிங் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? ரசிகர்கள் ஏமாற்றம்!
மூன்றாவது வீரராக தான் களம் இறங்கினால் அது அணியின் சமநிலையை அதிகரிக்கும் என்று நினைத்து இந்த மாற்றத்தை செய்தததாகவும், மூன்றாவது இடத்தில் விளையாடியது மகிழ்ச்சியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் திரிப்பாதி அதிரடியாக விளையாட கூடியவர் என்பதால், அவர் துவக்க வீரராக களமிறங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் ருதுராஜ் கெய்க்வாட் குறிப்பிட்டுள்ளார்.
