டி20 உலகக்கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல் தவிர்க்க முடியாது – அஸ்வின் கணிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
டி20 உலகக்கோப்பை: இந்தியா–பாகிஸ்தான் மோதல் தவிர்க்க முடியாது – அஸ்வின் கணிப்பு

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாட மறுக்கும் முடிவிலிருந்து கண்டிப்பாக பின்வாங்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஆனால், லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்காது என்று அறிவித்திருந்தது. இதற்கு உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது. மேலும், போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தானுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எச்சரித்தது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயமாக நடைபெறும் என்றும், அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா–பாகிஸ்தான் போட்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதால், வணிக ரீதியாகவும் அது முக்கியமானதாக இருக்கும் என அஸ்வின் குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலையில், போட்டி நடைபெறுவது இரு அணிகளுக்கும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாட்டை பல வழிகளில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அஸ்வின் விமர்சித்தார். கடந்த காலங்களில் பாதுகாப்பு காரணங்களால் சில அணிகள் போட்டிகளை தவிர்த்திருந்தாலும், தற்போதைய சூழ்நிலை அதற்கு ஒப்பானதல்ல என்று அவர் கூறினார்.

போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படும். ஒளிபரப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியாவுக்கு எதிராக வேறு நாட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் போட்டியை தவிர்ப்பது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதற்கிடையில், அயர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்காக பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இலங்கைக்கு சென்றுள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பிப்ரவரி 7ஆம் தேதி கொழும்பில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர