கம்பீரின் பதவிக்கு ஆபத்து: இலங்கைத் தொடர்தான் கடைசியா? - கடுமையான அதிருப்தியில் பிசிசிஐ!
இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீதான பிசிசிஐ மற்றும் மூத்த வீரர்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. தோல்விகளுக்குப் பொறுப்பேற்க மறுக்கும் அவரது செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற கௌதம் காம்பீரைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அணியின் உள்ளக வட்டாரங்களில் அவருக்கு எதிரான அதிருப்திக் குரல்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
கடந்த ஆண்டு கம்பீருக்கு வழங்கப்பட்ட முழுமையான ஆதரவு, தற்போது படிப்படியாகக் கரைந்து வருவதாகவும், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் உள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலைமைக்கு அணியின் முன்னணி வீரர்கள் சிலரின் கோபமும் அதிருப்தியுமே முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.
தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை சொல்லும் கம்பீரின் போக்கு பிசிசிஐ நிர்வாகத்தின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. உயர்மட்ட பிசிசிஐ வட்டாரங்களின் கூற்றுப்படி, ஒரு தொடர் தோல்விக்குப் பின்னால் தனது தவறுகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, காம்பீர் துணை பயிற்சியாளர்கள், வீரர்களின் செயல்திறன் அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி முறைகள் போன்றவற்றை விமர்சிப்பதில் கவனம் செலுத்துகிறார்.
இந்த அணுகுமுறை டிரெஸ்ஸிங் ரூமில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில அனுபவமிக்க வீரர்கள், காம்பீரின் பணியாற்றும் முறை குறித்த தங்களது கவலைகளை, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களிடம் முறைசாரா முறையில் பகிர்ந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்ற ஆரம்ப காலத்தில், காம்பீருக்கு தனக்கு வேண்டிய குழுவைத் தேர்வு செய்வதிலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பிசிசிஐ முழு சுதந்திரம் அளித்திருந்தது. எனினும், அந்த சுதந்திரத்தை முறையான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாகவும், "அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை" என்ற அவரது தொடக்க கால அறிக்கையையே இப்போது தோல்விகளுக்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதாகவும் பிசிசிஐ குற்றம்சாட்டுகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் ஏற்பட்ட தோல்விகளிலிருந்து அவர் தப்பிப் பிழைத்தாலும், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்த தோல்விகளும் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், வரவிருக்கும் இலங்கைக்கான சுற்றுப்பயணமே கௌதம் காம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கான திருப்புமுனையாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்தத் தொடரிலும் இந்திய அணி சொதப்பினால், அவரது பதவி நீக்கம் நிச்சயமானதாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 2027 ஆம் ஆண்டு வரை கையெழுத்தான அவரது ஒப்பந்தம் மட்டுமே தற்போது அவருக்கு ஒரே பாதுகாப்புக் கவசமாக உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், கடைசிகட்டத்தில் பயிற்சியாளரை மாற்றும் அவசர முடிவை பிசிசிஐ எடுக்க வாய்ப்பில்லை என்றும், மேலும் காம்பீரை பதவியிலிருந்து அகற்றுவது என்பது அதன் நிர்வாகத்திற்கு எளிதான காரியமல்ல என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது மிகுந்த பணிச்சுமை, தொடர் பயணங்கள் மற்றும் ஊடகங்களின் கண்காணிப்பு நிறைந்த ஒரு கடினமான பொறுப்பாகும் என்பதையும் பிசிசிஐ கருத்தில் கொள்கிறது.