இந்திய அணியில் அடுத்தடுத்து காயங்கள் - கம்பீர், கில் அதிருப்தி; மருத்துவக் குழு மாற்றம் பற்றிய பேச்சு!
இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வரும் நிலையில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மருத்துவக் குழுவின் செயல்பாடு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அணியின் மருத்துவக் குழு மற்றும் உடற்பயிற்சியாளர்களின் செயல்பாடு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் இந்த தொடர் காயங்களால் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் காயமடைந்தது அணி நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதை அடுத்து, இந்திய அணியின் தலைமை உடற்பயிற்சியாளர் கமலேஷ் ஜெயின் மற்றும் மருத்துவர் ரிஸ்வான் கான் ஆகியோரின் செயல்பாடுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
2022 முதல் இந்திய அணியுடன் பயணிக்கும் கமலேஷ் ஜெயின் மீது புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பிறகு தங்களது பதவிகளை இழக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய வீரர்கள் காயம் காரணமாகத் தொடர்ந்து விலகுவதால், ஒரு நிலையான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய முடியாமல் கௌதம் கம்பீரும், சுப்மன் கில்லும் பெரிதும் திணறி வருகின்றனர்.
15 வீரர்கள் கொண்ட பட்டியல் கூட விருப்பப்படி தேர்வு செய்ய முடியாமல் போவது தங்களுக்குப் பெரும் சங்கடத்தை அளிப்பதாக பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள சிலர் புலம்பி வருவதாகத் தெரிகிறது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய அகாடமியின் (சிஓஇ) செயல்பாடுகளும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.
காயம் குணமடைவதற்கு முன்பாகவே வீரர்கள் அவசர அவசரமாக மைதானத்திற்குள் திருப்பி அனுப்பப்படுகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது நிதிஷ் குமார் ரெட்டி 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தாரா, ஹர்ஷித் ராணா அவசரமாகக் களமிறக்கப்பட்டாரா என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவரும் அதற்கு முன்னர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தவர்கள். உடற்தகுதி பெற்றால் மட்டுமே மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்ற நிலையில், அவர்கள் அவ்வாறு விளையாடிய சில போட்டிகளில் மீண்டும் காயம் அடைந்தது கவலையை அதிகரித்துள்ளது.
முன்னாள் உடற்பயிற்சி பயிற்சியாளர் சோஹம் தேசாய்க்குப் பதிலாக அட்ரியன் லீ ரக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு, வீரர்களின் உடற்தகுதி குறித்த விவகாரம் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பல மூத்த வீரர்கள், பிசிசிஐ-க்கு வெளியே இருக்கும் மருத்துவ நிபுணர்களிடம் தங்களது காயங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பிசிசிஐ பல அதிரடி முடிவுகளை எடுத்து, வீரர்களின் காயங்களைக் குறைக்கப் புதிய வழிமுறைகளைக் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.