கமிந்து மெண்டிஸின் அதிரடி சதத்தால் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்திய கொழும்பு கேப்ஸ் – தொடர்ச்சியான 3ஆவது வெற்றி
லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் கமிந்து மெண்டிஸின் 88 ஓட்ட அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் கொழும்பு கேப்ஸ் அணி தம்புள்ளை சிக்ஸர்ஸை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது.
லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில் கொழும்பு கேப்ஸ் அணி, தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்துள்ளது.
தம்புள்ளை மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கேப்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொழும்பு கேப்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை குவித்தது.
அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 39 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றார். அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றதுடன், அவரது இன்னிங்ஸில் 9 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கின.
அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய ஆரம்ப வீரர் ரூபின் ஹேர்மன், 24 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி, ஆரம்பம் முதலே அழுத்தத்தை எதிர்கொண்டது. கொழும்பு கேப்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தம்புள்ளை வீரர்கள் சீரான ஓட்ட வேகத்தை தொடர முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் பவன் ரத்நாயக்க சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கும். அதேவேளை மார்கஸ் ஏக்கர்மன் 33 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்தார்.
கொழும்பு கேப்ஸ் அணியின் பந்துவீச்சில் சாஹ்நவாஸ் தஹானி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதிரடியாக 88 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கமிந்து மெண்டிஸ், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் கொழும்பு கேப்ஸ் அணி தொடரில் தனது மூன்றாவது வெற்றியையும், தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.