இந்திய தொடரில் வரலாற்று சாதனை: இலங்கை இளம் நட்சத்திரம் சோனல் தினுஷவுக்கு ஐசிசி விருது பரிந்துரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய இளம் வீரர் சோனல் தினுஷ ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். முழு விபரம் இதோ!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இலங்கை இளம் வீரர் சோனல் தினுஷ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தினுஷ உருவெடுத்தார்.
குறிப்பாக கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பாலோ-ஆன் வழங்கிய இக்கட்டான நிலையிலும் இலங்கை அணியைத் தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்ததில் இவரது பங்கு அளப்பரியது.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினுஷா, நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தம் 420 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார்.
கொழும்பு டெஸ்டின் ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வெறும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டிருந்த சூழலில், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக தினுஷா விளங்கினார்.
அபாரமான பொறுமையையும் நேர்த்தியான ஆட்ட நுணுக்கத்தையும் வெளிப்படுத்திய அவர், 264 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைக் குவித்து போட்டியை சமநிலையில் முடித்து வைத்தார்.
இவரது அசாத்திய போராட்டத்தால் இந்திய அணி 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவது தடுக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சமநிலையாகவும் அமைந்தது.