இந்தியா - பாகிஸ்தான் பங்கேற்கும் ட்ரை-சீரீஸ்: வருவாயைப் பெருக்க ஐசிசி புதிய திட்டம்
இந்தியா - பாகிஸ்தான் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களை நடுநிலையான நாடுகளில் நடத்துவது தொடர்பாக துபாயில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஐசிசி விவாதிக்க உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் வகையில் மூன்று அல்லது நான்கு நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கிரிக்கெட் தொடர்கள் மூலமான வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் குறித்து, துபாயில் வரும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஐசிசி கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்தச் சூழலில், 1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் நடத்தப்பட்டதைப் போன்ற முத்தரப்புத் தொடர்களை மீண்டும் அறிமுகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.
வழக்கமான இருதரப்பு தொடர்களை விட இதுபோன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என ஐசிசி கருதுகிறது. பாகிஸ்தானுடன் நேரடி இருதரப்புத் தொடர்களில் விளையாட இந்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், முத்தரப்புத் தொடர்களுக்கு அனுமதி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் ஐசிசி இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் இறுதி செய்யப்பட்டால், போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற நடுநிலையான மைதானங்களிலேயே நடத்தப்படும்.
12 டெஸ்ட் விளையாடும் நாடுகள் மற்றும் 8 இணை நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் துபாய் கூட்டத்தில், 2027 முதல் 2031 வரையிலான எதிர்கால சுற்றுப்பயண கால அட்டவணை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த 2025 ஆசியக் கோப்பை தொடரின்போது இரு நாட்டு வீரர்களுக்கு இடையிலான கைகுலுக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டதும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையைப் பெற மறுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் வாரியம் தொடர்ந்து விளையாட ஆர்வம் காட்டி வந்தாலும், இந்திய அரசின் அனுமதியைப் பொறுத்தே ஐசிசியின் இந்த திட்டம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.