எயார்பஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு
எயார்பஸ் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 8 இலட்சம் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அங்கு அவரிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகள் மற்றும் வாக்குமூலப் பதிவை அடுத்தே அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.