ஈரான் மீது 100 இடங்களில் தாக்குதல்: திருமண விழாவில் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் 5 பேர் பலி
ஈரான் மீது சுமார் 100 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், திருமண விழா நடைபெற்ற குடியிருப்பு பகுதியில் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் அரசுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் உட்பட சுமார் 100 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை புதைக்க முயன்றதாகவும், இதன் காரணமாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் சிரிக் நகரில் உள்ள குஹெஸ்டாக் பகுதியில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஹெஸ்டாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரு குடும்பங்கள் இணைந்து திருமணத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை ஏற்கனவே இடம்பெற்ற தொடர் அட்டூழியங்களில் இருந்து தனியாகப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், ஜோர்டானின் அகபா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏனைய மூன்று ஏவுகணைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அமெரிக்க படைகளுக்கு “மறக்க முடியாத பாடங்களை” கற்றுக்கொடுப்போம் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்கா ஏறக்குறைய முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாகவும், ஈரானின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈரானிய மக்கள் எப்போது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறார்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.