2026-ம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா
வியட்நாமில் நடைபெற்ற 73-வது உலக அழகிப் போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் 2026-ம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடைபெற்ற 73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் 2026-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக அழகிப் போட்டி வியட்நாமில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி ஜோஹெய்ரி மோலா முதலிடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசு மீண்டும் உலக அழகிப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பாக 1982-ம் ஆண்டு மரியாசெலா அல்வரெஸ் மூலம் அந்நாடு முதல்முறையாக இப்பட்டத்தை வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக, டொமினிகன் குடியரசிலிருந்து உலக அழகிப் பட்டம் வெல்லும் இரண்டாவது பெண் என்ற பெருமையை ஜோஹெய்ரி மோலா பெற்றுள்ளார்.
இப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவைச் சேர்ந்த தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர். இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிகிதா முதல் 40 இடங்களுக்குள் முன்னேறிய போதிலும், அவரால் முதல் 20 இடங்களுக்கான சுற்றுக்குத் தகுதிபெற இயலாமல் வெளியேறினார். முன்னதாக, கடந்த 2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.