சமூக வலைத்தள அவதூறு வழக்கு: 21 பேர் கைதானாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என நடிகை ரம்யா திட்டவட்டம்
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக 21 பேர் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும், பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்து பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேர் மீதான புகாரை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற மாட்டேன் என பிரபல கன்னட நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டபோது, காவல்துறை நடவடிக்கையைப் பாராட்டி நடிகை ரம்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யா குறித்து இணையத்தில் மிகக் கடுமையான அவதூறுகளையும் ஆபாசமான கருத்துகளையும் பதிவிட்டனர். இதுகுறித்து நடிகை ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 21 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கு பெங்களூரு 6-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடிகை ரம்யாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கோர முயன்றனர். ஆனால் அந்த சந்திப்பு நிகழாத நிலையில், தங்கள் பிள்ளைகள் செய்த தவறை மன்னித்து வழக்கை வாபஸ் பெறுமாறு ஊடகங்கள் வாயிலாக அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த நடிகை ரம்யா, கையில் செல்போன் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண்ணைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்றும், விமர்சிக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாகப் பேச நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதால், வழக்கை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.