விஜய் அரசியலுக்கு வந்தது நல்லதுதான்... ஆனால்... நடிகர் சூரி அதிரடி பேச்சு!
மண்டாடி திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, மீனவர்களின் வாழ்வியல் மற்றும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பர நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் ஹைதராபாத்தைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, படம் குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
'மண்டாடி' திரைப்படம் தனக்கு ஒரு சாதாரண திரைப்பட அனுபவமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் மிக முக்கியமான அனுபவமாக அமைந்துள்ளதாக சூரி தெரிவித்தார்.
குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை மரியாதையுடன் பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். கபடி, ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளைப் போலவே, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மீனவர்களின் கலாச்சாரத்தையும் தொழிலையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இப்படத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி, இன்றைய தலைமுறையினர் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றார். சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பதும், சிறுவர்கள் கூட அரசியல் பேசத் தொடங்கியிருப்பதும் நல்ல மாற்றமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் மக்களிடையே நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதை வரவேற்பதாகக் கூறிய அவர், அதேவேளையில் திரையுலகில் விஜய் இல்லாதிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தார்.