பெண் உதவியாளர்களுக்கு இலட்சக்கணக்கில் பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்; வெளியான தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 45,000 டாலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக நிதி ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது உதவியாளர் நடாலி ஹார்பிற்கு 45,000 டாலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக நிதி ஆவணங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தனது நெருங்கிய விசுவாசிகளான மூன்று ஊழியர்களுக்குப் பணப் பரிசுகளை வழங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, அவரது செயலாளரும் சர்ச்சைக்குரிய நபருமான நடாலி ஹார்ப் (Natalie Harp) உட்பட மூன்று இளம் பெண் ஊழியர்களுக்கு தலா 45,000 டாலர் வீதம் மொத்தம் சுமார் 1,50,000 டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டாட்சி நிதி வெளிப்படுத்தல் ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி, இந்தத் தொகையானது மூன்று ஊழியர்களின் ஆண்டு வருமானத்தில் சுமார் 33 சதவீத அதிகரிப்புக்குச் சமமானதாகும். ஒவ்வொரு பணியாளரின் நிதி வெளிப்படுத்தல் படிவத்திலும் இந்தப் பணப் பரிசுகள் 'விடுமுறைக்கான ரொக்கப் பரிசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும், வெளி மூலங்கள் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதைத் தடை செய்யும் கூட்டாட்சிச் சட்டங்களை இந்த நடவடிக்கை மீறக்கூடும் என சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வெள்ளை மாளிகைத் துறையில் பணியாற்றுவதை அவர்களுக்கு எளிதாக்குவதற்காகவே ட்ரம்ப் இந்த உதவியைச் செய்துள்ளார் என்று முன்னாள் வெள்ளை மாளிகை நெறிமுறைகளின் தலைவர் ரிச்சர்ட் பெயிண்டர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தகைய பரிசுகளை வழங்குவது சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடாலி ஹார்ப் தவிர, ஓவல் அலுவலக செயற்பாடுகளின் துணை இயக்குநர் சேம்பர்லேன் ஹாரிஸ் மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகர் மார்கோ மார்ட்டின் ஆகியோருக்கும் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டகால உதவியாளரான வால்ட் நௌடா என்பவருக்கு 20,000 டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.