இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளதோடு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அவர், நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் வரலாற்று நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதல் உரிமை' மற்றும் 'மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் கீழ் இலங்கை மிக முக்கியப் பங்காளியாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மூன்று நாள் விஜயத்தின் போது பாதுகாப்பு, பொருளாதார ஈடுபாடு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.