அடுத்த ஆண்டு பிப்ரவரி-ஏப்ரலில் கடும் வறட்சி எச்சரிக்கை - எல்-நினோவை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர தலைமையில் அவசரக் கூட்டம்

எதிர்வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் கடும் வறட்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அடுத்த ஆண்டு பிப்ரவரி-ஏப்ரலில் கடும் வறட்சி எச்சரிக்கை - எல்-நினோவை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர தலைமையில் அவசரக் கூட்டம்

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் உயர் அதிகாரிகள் குழுவின் அவசரக் கூட்டம் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள எல்-நினோ நிலைமைக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய நீர்த்தேவைகள், அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கான நீரை வழங்கும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் விரிவாக விசாரித்தார்.

கடந்த யால பருவத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பயிர்ச் சேதங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும், குடிநீர் மற்றும் பிற நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் நாடு முழுவதும் கடுமையான வறண்ட காலநிலை நிலவக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளதால், அந்தத் தாக்கங்களில் இருந்து விவசாயம், பெருந்தோட்டத் தொழில், நன்னீர் மீன்பிடித்தொழில், நீர் மற்றும் மின்சார விநியோகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான தயார்நிலைத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஆழமாக ஆராய்ந்தார்.

மேலும், பாதிக்கப்படக்கூடிய இந்த காலப்பகுதியில் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் பொருளாதாரம் இயல்பு நிலை திரும்பும் வரை அவர்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான செயல்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய பிரதான நீர்தேக்கங்களின் நீர் கொள்ளளவு, தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கான உத்தரவாதங்கள், விவசாயத்திற்கான நீர் வழங்கல் மற்றும் எதிர்கால விவசாயத் திட்டங்கள், தேசிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

பிரதான நீர்தேக்கங்கள், சிறு நீர்ப்பாசன வசதிகள் மற்றும் சிறிய குளங்கள் மூலம் எத்தனை சதவிகித நுகர்வோருக்கு நீர் வழங்கப்படுகிறது என்பது குறித்த தெளிவான தரவு முறைமை இருக்க வேண்டியதன் அவசியத்தையும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நீர் வெட்டு ஒன்றை அமல்படுத்த நேரிட்டால், நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வற்றும் வரை காத்திருக்காமல், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டத்தை வகுக்கவும், குளங்கள், ஆறுகள், ஓடைகள் முழுமையாக வற்றிப்போகும் பகுதிகளை வரைபடமாக்கி (Map) அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் மட்டுமல்லாமல் அனைத்து அத்தியாவசிய நீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராக இருக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள நீர் மூலங்களைச் சுத்திகரிக்க பிராந்திய செயலாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் முதல் மழை பொழியும்போது, நீர்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றும் வரை காத்திருக்காமல், அந்த மழைநீரையே பயன்படுத்தி நிலங்களைத் தயார்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக நீர்ப்பாசனத் திணைக்களமும் மகாவலி அதிகார சபையும் இணைந்து கூட்டுத் திட்டத்தின் படி செயல்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உர விநியோகத் திட்டம் குறித்தும் அவர் வினவினார்.

இதேவேளை, எல்-நினோவின் தாக்கத்தால் நன்னீர் மீன்பிடித் துறைக்கும் மீன் உற்பத்திக்கும் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்படும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரை பாதுகாப்பளிக்கும் திட்டங்களை தயாரிக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்டத் துறைக்கு வறட்சி ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கான எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், வனவிலங்கு வலயங்களில் உள்ள விலங்குகளின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் மழைக்காலத்தில் மழைநீரின் உச்ச கட்ட கொள்ளளவை திறம்பட சேகரிப்பதற்காக, நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் உடனடியாகப் புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த ஆண்டு எவ்வித துண்டிப்பும் இன்றி மின்சாரத்தை வழங்குவதற்கும், அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் நீர்தேக்கங்கள் வற்றிப்போவதால் ஏற்படக்கூடிய மின் உற்பத்தி இடையூறுகளை எதிர்கொள்வதற்காக சாதாரண தேவையை விட அதிகப்படியான உபரி மின் திறனை (Excess Capacity) பராமரிக்கத் திட்டமிடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.