யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 30-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 30-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன், அன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்படும்.

அதன் நீட்சியாக இவ்வருடமும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டறிவதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படும். அதுமாத்திரமன்றி, உள்ளகப் பொறிமுறைகளின் தோல்வியின் விளைவாக சர்வதேச பொறிமுறை ஒன்றை இம்மாநாட்டின் ஊடாக வலியுறுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு முதல் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போராட்டங்கள், நீதிக்கான தேடல் இன்னும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது.

இதேவேளை, மேற்படி சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25-ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்தறையிலும் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றைக் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்துள்ளது.

இது இவ்வாறிருக்க, அன்றைய தினம் (25) தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மாத்தறையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறிய முடிகிறது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.