சொந்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் தந்தைக்கு 15 ஆண்டு சிறை
தனது 14 வயது மகளை மதுபோதையில் வைத்து பாலியல் துர்நடத்திய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றம், தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வவுனியாவில் இந்தக் குற்றச்சம்பவம் நடைபெற்றது, அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயதாக இருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில், அவர் தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்தார், அன்று தந்தை மதுபோதையில் இருந்த நிலையில் வீட்டிலேயே மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்தன. விசாரணைகளின் அடிப்படையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, குற்றம் அவரது சொந்த தந்தையினால் மேற்கொள்ளப்பட்டமை, அதனால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் அவசியம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த நட்டஈட்டைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.