5 வயது காசா சிறுமி குடும்பத்துடன் கொல்லபட்டமைக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் - விசாரணைக்கு உத்தரவு
காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு இஸ்ரேல் முதல் முறையாக பொறுப்பேற்று, குற்றவியல் விசாரணையை அறிவித்துள்ளது.
காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இஸ்ரேல் முதல் முறையாக வெளிப்படையாக பொறுப்பேற்றுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணையை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 29, 2024 அன்று, இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய ஹிந்த் மற்றும் அவரது உறவினர்கள் பயணித்த கார் நோக்கி மொத்தம் 335 தோட்டாக்கள் சுடப்பட்டன.
அந்த காரில் இருந்த ஹிந்த் தவிர மற்ற அனைவரும் உடனடியாக உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் காருக்குள் சிக்கிக் கொண்ட ஹிந்த், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு தொலைபேசியில் அழைத்து, அழுகையும் பயமும் நிறைந்த தனது மழலைக்குரலில் உதவி கோரினார்.
ஆனால், அவளை மீட்க விரைந்த இரண்டு ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் ஹிந்தும் இஸ்ரேல் படையினரின் மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். ஹிந்த் கடைசியாக பேசிய அந்த அதிர்ச்சிகரமான ஆடியோ உலகம் முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; மேலும், 'வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப்' என்ற பெயரில் வெளியான திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது.
தற்போது வெளியான இஸ்ரேலின் புதிய அறிக்கையில், ராணுவத்தின் எச்சரிக்கைகளை மீறி அந்த வாகனம் சென்றதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதுபோன்ற பிற பாலஸ்தீனிய உயிரிழப்புகளிலும் முறையான குற்றவியல் விசாரணை நடத்தப்படும் எனவும், அதற்காக ராணுவ காவல் குற்ற புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் வகையிலும், தங்கள் படைகளின் தவறுகளைத் தாங்களே ஆய்வு செய்வதாகக் காட்டிக் கொள்ளவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.