ரிஷப் பண்ட் மாபெரும் சிக்ஸர்: மைதானம் தாண்டி சாலையில் விழுந்த பந்து - இலங்கை டெஸ்ட் பரபரப்பு
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் 133 கிமீ வேகப் பந்தை மைதானத்திற்கு வெளியே தெருவில் விழும் வகையில் அற்புதமான சிக்ஸர் அடித்தார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒரு அசுரத்தனமான சிக்ஸரை பறக்கவிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த ஆறு ரன்கள் மட்டுமல்ல, அது பறந்த திசையும் வியப்பூட்டும் வகையில் அமைந்தது. 27வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய 133.6 கி.மீ வேகப் பந்தை, கிரீஸிலிருந்து வெளியேறி நேர்த்தியாக டைமிங் செய்து லாங்-ஆஃப் திசைக்கு மேல் பந்த் பறக்கவிட்டார். அவரது பேட்டில் இருந்து வெளியேறிய பந்து மைதானத்தின் எல்லையை கடந்து, வெளிப்புற சாலையில் சென்று விழுந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, முதல் இன்னிங்ஸிலும் பண்ட் நம்பிக்கைக்குரிய துவக்கத்தைப் பெற்றிருந்தார். இருப்பினும், 62 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட்டிற்கு முயன்று கேஷர நுவன்தவின் பந்துவீச்சில் சோனல் தினுஷவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் நுவன்தா வீழ்த்திய முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஏற்கனவே மூன்றாவது நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியை 284 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து 178 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தை தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆன அதிர்ச்சியுடன் துவக்கியது. ஆனால் தேவ்தத் படிக்கல் (75 பந்துகளில் 44 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (47 பந்துகளில் 35 ரன்கள்) ஆகியோர் இணைந்து அணியை மீட்டெடுத்தனர்.
இருப்பினும், மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக படிக்கல் கேஷர நுவன்தா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதனையடுத்து, நான்காவது நாள் மதிய உணவு இடைவேளை முடிவில் இந்திய அணி 36 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்தது.