ரோஹித்-அகர்கர் மோதல்: ஒருநாள் ஓய்வு, கம்பீர் புகார் - பிசிசிஐ-யில் பரபரப்பு
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையே ஒருநாள் போட்டி ஓய்வு குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து வரும் தகவல்களின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்த புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதத்திற்குப் பிறகு, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கும் அவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்கும் நோக்கில் ரோஹித்தை அணியில் இருந்து நீக்க தேர்வுக்குழு திட்டமிட்டதாகவும், இது தொடர்பாக அகர்கர் ரோஹித்தை இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இரு போட்டிகளுக்கு பின்னர் தனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பதாக ரோஹித் உறுதியளித்திருந்த நிலையில், லார்ட்ஸ் போட்டியில் சதம் அடித்ததை தொடர்ந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த முடிவு மாற்றமே இருவருக்கும் இடையிலான பிளவை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், அஜித் அகர்கரை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை ரோஹித் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு கூடுதலாக, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் விதித்துள்ள கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ரோஹித் பிசிசிஐ நிர்வாகத்தில் அதிருப்தி தெரிவித்ததாகவும், இந்த சூழலில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மனை அணியின் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாகவும் ரோஹித்தின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் இதே போன்ற சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போதும் அவர் தொடர்ந்து விளையாட விரும்பிய நிலையில் தேர்வுக்குழுவினர் தமது முடிவில் உறுதியாக இருந்தனர். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ரோஹித் சர்மா தொடர்ந்து ஒருநாள் அணியில் இருப்பார் என்றும், விரைவில் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எனவே, தற்போதைக்கு ரோஹித்தின் ஒருநாள் போட்டி எதிர்காலம் பாதுகாப்பானதாகவே பார்க்கப்படுகிறது.