சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க திசைகாட்டி முயற்சிக்கிறது: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
திசைகாட்டி அரசாங்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் ஜனநாயக கட்டமைப்பை பலவீனப்படுத்தி சர்வாதிகார தனிக்கட்சி ஆட்சியை உருவாக்க திசைகாட்டி அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பிலான பொதுமக்கள் கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய சஜித் பிரேமதாச, நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பாக உலகளவில் பல முக்கிய உடன்படிக்கைகள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மெசபடோமியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானிய காலப்பகுதிகளில் இருந்து மாக்னா கார்ட்டா, அமெரிக்க அரசியலமைப்பு, மனித உரிமைகள் பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்னேற்றங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் இடையிலான சமநிலை மற்றும் கட்டுப்பாட்டு முறைமைகளே ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரமான நீதித்துறை இல்லாமல் வலுவான ஜனநாயகத்தை உருவாக்க முடியாது என்றும், நீதித்துறை எவ்வளவு சுதந்திரமாக செயற்படுகிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
மேலும், ஆட்சியில் இல்லாதபோது சர்வதேச கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் சிலர், அதிகாரத்தை பெற்ற பின்னர் அதே கொள்கைகளை புறக்கணிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட வேண்டிய நீதியரசர் பதவிகள் காலியாக இருந்தும், அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதியரசர்கள் நியமனங்களை தாமதப்படுத்துவது அடிப்படை உரிமைகளை பாதிப்பதுடன், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தும் செயற்பாடாக அமையலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.