சிஎஸ்கேவில் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம்.. ருதுராஜ் வந்ததும் அதிரடி முடிவு - ஹர்திக் பாண்டியா வதந்திக்கு முற்றுப்புள்ளி
2026 ஐபிஎல்லில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2027 தொடருக்கான பெரும் மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பற்றிய பரிமாற்றப் பேச்சு வதந்திகளையும் அந்த அணி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.
2027 ஐபிஎல் தொடருக்கான தயாரிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் பெரும் மாற்றங்கள் வரவிருக்கின்றன. வீரர்கள் தக்கவைப்பு முதல் பயிற்சியாளர் குழு வரை அனைத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியேற்றப்பட்ட பின்னர், உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் குறித்தும் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த முக்கிய முடிவுகள் அனைத்தும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே முகாமில் இணைந்த பின்னரே எடுக்கப்படும் என்று தெரிகிறது. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்த உள்ளார். இந்தத் தொடர் முடிந்தவுடன், அவர் நேரடியாக சிஎஸ்கே அணியின் உடற்தகுதி முகாமில் இணைவார்.
2026 ஐபிஎல் தொடரில் வெறும் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட சிஎஸ்கே அணி, இந்த முறை பெரும் சீர்திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வீரர்களுக்கு 2 முதல் 3 நாட்கள் கொண்ட உடற்தகுதி முகாம்களை நடத்தி, அவர்களின் உடற்தகுதியை ஆராய்ந்து வருகிறது. கடந்த மூன்று சீசன்களாக அணியின் செயல்பாடு சொதப்பிய நிலையில், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது, அணியின் மற்ற உதவிப் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிலும் பெரிய அளவில் களையெடுக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் முகாமிற்கு வந்தவுடன், யார் யாரை அணியில் இருந்து விடுவிப்பது, யாரைத் தக்கவைப்பது, மற்றும் பயிற்சியாளர் குழுவில் மேலும் யாரையெல்லாம் வீட்டுக்கு அனுப்புவது என்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணிக்கு மாற்றப் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல்களுக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பை அணியின் செய்தித் தொடர்பாளர், "எங்கள் அணியின் ஆய்வுப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. வீரர்களைப் பரிமாற்றம் செய்வது குறித்து நாங்கள் எந்த ஐபிஎல் அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த ஆய்வு முடிந்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.