தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை: கிளர்ச்சி வழக்கில் அதிரடித் தீர்ப்பு
நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, யூன் சுக் இயோல் எவ்வித சலனமும் இன்றி அமைதியாகத் தோற்றமளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (65), கடந்த 2024 டிசம்பரில் நாட்டில் இராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்று, கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காகக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியதற்காக அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் யூனின் அந்த இராணுவ ஆட்சி உத்தரவு வெறும் ஆறு மணி நேரம் மட்டுமே நீடித்தது. இருப்பினும், அது நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையே ஆட்டிப்படைத்தது. அந்தச் குறுகிய காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கின. இந்தத் தற்காலிக இராணுவ ஆட்சி முயற்சி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அடுத்த தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடையவும் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, யூன் சுக் இயோல் எவ்வித சலனமும் இன்றி அமைதியாகத் தோற்றமளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.
நீதிபதி தனது தீர்ப்பில், "யூன் தென் கொரியாவின் ஜனநாயகத்தை அடிப்படை ரீதியாகச் சிதைத்துள்ளார், எனவே அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினரின் தவறுகளைச் சுட்டிக்காட்டவே தான் அவ்வாறு செய்ததாக யூன் வாதிட்ட போதிலும், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
யூன் ஏற்கனவே இந்த இராணுவ ஆட்சி முயற்சி தொடர்பான மற்றொரு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை தவிர, அவர் இன்னும் இரண்டு முக்கிய வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பு தென் கொரியாவை அரசியல் ரீதியாக இருவேறு துருவங்களாகப் பிரித்துள்ளது. ஒருபுறம் ஜனநாயகத்தின் வெற்றி எனக் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் அவரது ஆதரவாளர்களின் போராட்டம் தொடர்வதால் நாட்டில் பதற்றம் நீடிக்கிறது.
