தேசியப் பூங்காவில் காட்டு யானை தாக்குதல் – சுற்றுலா பயணி உயிரிழப்பு!
சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
தாய்லாந்தில் காட்டு யானை தாக்கியதில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானையின் தாக்குதலால் உயிரிழந்த மூன்றாவது நபராக இவர் பதிவாகியுள்ளார்.
உயிரிழந்தவர் 65 வயதுடையவர் என்றும், அவர் லொப்புரி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவியுடன் நேற்று காலை காவ் யாய் தேசியப் பூங்காவில் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தார். அப்போது திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கியதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்த யானையை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. யானையை வேறு பகுதிக்கு மாற்றுவது அல்லது அதன் தாக்குதல் தன்மையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் சுமார் 330 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 800 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 220க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தாய்லாந்தின் தேசிய பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
