சீனாவில் ரூ.5 கோடி சொகுசு காரை சிறுவர்கள் சேதப்படுத்திய சம்பவம் - ₹95 லட்சம் இழப்பீடு கோரி பெற்றோர் மீது வழக்கு!
சீனாவின் குன்மிங் நகரில் ரூ.5.04 கோடி மதிப்புள்ள சொகுசு காரை நான்கு சிறுவர்கள் மீது ஏறி விளையாடி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு காட்சிகளில் சிறுவர்கள் மூங்கில் கம்புகளால் காரைத் தட்டியது பதிவாகியுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில், ரூ.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று சிறுவர்களின் விளையாட்டில் சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரின் இந்திய மதிப்பு சுமார் ரூ.5.04 கோடி என கூறப்படுகிறது.
கார் உரிமையாளர் வெளியூருக்குச் சென்றிருந்த வேளையில், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் அந்த காரின் மீது ஏறி விளையாடியுள்ளனர். மேலும், அவர்கள் மூங்கில் கம்புகளைக் கொண்டு காரின் உடற்பகுதியைத் தட்டி சேதப்படுத்தியதும் கண்காணிப்பு காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதனால் காரின் முன்பகுதி, மேற்கூரை, கண்ணாடிகள், பின்புற விளக்குகள் உள்ளிட்ட பல இடங்களில் கீறல்கள் ஏற்பட்டுள்ளன. முன்புற தடுப்புப் பகுதியும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த காரை அசல் உதிரிபாகங்களைக் கொண்டு பழுதுபார்க்க சுமார் ஒரு லட்சம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹95 லட்சம் செலவாகும் என கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கார் உரிமையாளர் சிறுவர்களின் பெற்றோருடன் இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், முழு இழப்பீட்டை வழங்க மறுத்த பெற்றோர், சுமார் 5,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 5 லட்சம்) மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கார் உரிமையாளர், முழு பழுதுபார்ப்பு செலவையும் பெற்றோரிடமிருந்து பெற்றுத்தரக் கோரி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் எந்த முடிவு வரும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
