பிசிசிஐ ஒப்பந்தத்தில் பெரிய மாற்றம் – கோலி, ரோஹித்தை முந்திய ஜடேஜா, சுப்மன் கில்லுக்கு சூப்பர் ஜாக்பாட்

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்று, பிப்ரவரி 9, 2026 அன்று வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ ஒப்பந்தத்தில் பெரிய மாற்றம் – கோலி, ரோஹித்தை முந்திய ஜடேஜா, சுப்மன் கில்லுக்கு சூப்பர் ஜாக்பாட்

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025–26 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்று, பிப்ரவரி 9, 2026 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தப் பட்டியல் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பல மூத்த வீரர்களின் தரவரிசை மாற்றப்பட்டுள்ளதுடன், இளம் தலைமுறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, இதுவரை மிக உயர்ந்த பிரிவாக இருந்த ‘A+’ பிரிவை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக, ‘கிரேட் ஏ’ (Grade A) பிரிவே இனி உச்ச பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த பிரிவில் மூன்று வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெற உள்ளனர். இதன் மூலம், ரவீந்திர ஜடேஜா, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட கூடுதலாக சம்பளம் பெறும் நிலை உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் பெரிய நட்சத்திரங்களாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த ஆண்டு ‘கிரேட் பி’ (Grade B) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதாலும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக உச்ச பிரிவில் இருந்த இந்த இரு வீரர்களும் தற்போது ரூ.5 கோடி சம்பளம் பெறும் இரண்டாம் நிலைப் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத காரணத்தால் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன்க்கும் இந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இடம் வழங்கப்படவில்லை.

புதிய ஒப்பந்தப் பட்டியல் மூலம், இந்திய அணியின் எதிர்கால முகமாக சுப்மன் கில் உருவெடுத்து வருவது தெளிவாகியுள்ளது. அதே நேரத்தில், அனுபவம், தற்போதைய பங்களிப்பு மற்றும் அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிசிசிஐ இந்த மாற்றங்களை செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்த மாற்றங்கள், இந்திய கிரிக்கெட்டில் தலைமுறை மாற்றம் வேகமாக நடைபெற்று வருவதற்கான இன்னொரு சான்றாக பார்க்கப்படுகிறது.