வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட பெண் - 8 பேர் மீது வழக்கு

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி போர்ச்சுக்கல் சூப்பர் மார்க்கெட் வேலைக்காக ரூ.11 லட்சம் கொடுத்த நாக்பூர் பெண், அங்கு சென்றதும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு மதுக்கடைக்கு விற்கப்பட்டார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
வெளிநாட்டு வேலை என ஏமாற்றி மதுக்கடை அடிமையாக விற்கப்பட்ட  பெண் - 8 பேர் மீது வழக்கு

வெளிநாட்டில் அதிக சம்பள வேலை எனும் கனவு, ஒரு நாக்பூர் பெண்ணின் வாழ்க்கையை பயங்கர சித்திரவதைக் கனவாக மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கேஷியர் வேலை என ஆசை காட்டி, மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம், தினமும் 8 மணி நேர வேலை என வாக்களித்த புனேவைச் சேர்ந்த 'We Migrate' என்ற வேலைவாய்ப்பு நிறுவனம், அந்த 28 வயது பெண்ணை கொடூரமாக ஏமாற்றியுள்ளது.

பி.காம் பட்டதாரியான இந்த திருமணமான பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, விசா மற்றும் பிற ஆவணங்களுக்காக பல தவணைகளில் சுமார் ரூ.11 லட்சம் வரை செலுத்தியுள்ளார். இதில் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு ரூ.8 லட்சமும், விசா, காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு ரூ.3 லட்சமும் அடங்கும். கடந்த மே 21 ஆம் தேதி போர்ச்சுக்கல் சென்றடைந்த அவரை, அங்கிருந்த ஏஜெண்டுகள் வரவேற்று, பின்னர் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து ஓர் அறையில் அடைத்து வைத்தனர். பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற கூடுதலாக ரூ.40,000 கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதன்பின்னர், புனே கன்சல்டன்சி தன்னை விற்றுவிட்டதாகக் கூறி, அவரை ஓடெமிரா (Odemira) பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அங்கு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை சுத்தம் மற்றும் பிற கட்டாயத் தொழிலாளி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், தன்னை 'வாங்கிய' மதுக்கடை உரிமையாளர், தனக்கு வேலைக்காக அல்ல, பாலியல் நோக்கத்திற்காகவே கொண்டு வரப்பட்டதாக கூறி கடும் உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதையை அளித்துள்ளார்.

இந்த கொடூர சித்திரவதைக்கு நடுவிலும் தைரியத்தை இழக்காத அந்தப் பெண், கடந்த ஜூன் 29 ஆம் தேதி தப்பித்து, லிஸ்பன், மாட்ரிட், தோஹா வழியாக புதுடெல்லி வந்து சேர்ந்துள்ளார். இந்தியா திரும்பிய பின்னரும், அந்த மோசடி நிறுவனம் அவரிடம் மேலும் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியதோடு, அவரது கணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், புனே குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், புனே விமந்தல் போலீசார் 'We Migrate' நிறுவன இயக்குனர்கள் உட்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிரதிமா பாட்டி, அமித்குமார் ஜா, அஸ்ஹர் ஷேக், கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் அடங்குவர். அவர்கள் மீது மனித கடத்தல், ஏமாற்றுதல், மிரட்டிப் பணம் பறித்தல், தவறான அடைப்பு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'We Migrate' நிறுவனத்தின் அலுவலகமும் முத்திரையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடும் இந்தியர்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதிக சம்பளம், எளிதான வேலைவாய்ப்பு எனும் விளம்பரங்கள் பல நேரங்களில் பெரிய மோசடிகளாக முடியும் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. வெளிநாட்டு வேலை தேடும் முன், வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.