தோனியின் ஹோட்டல் அறை குறித்து சுவாரஸ்ய ரகசியத்தை பகிர்ந்த ரஹானே!
சுற்றுப்பயணங்களின் போது தோனியின் ஹோட்டல் அறை ஏன் எப்போதும் திறந்திருக்கும்? முன்னாள் இந்திய வீரர் அஜிங்யா ரஹானே பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் எளிமையான குணநலன்களைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் அஜிங்யா ரஹானே சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தோனியின் தலைமையில் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளிலும் விளையாடிய அனுபவம் ரஹானேவுக்கு உள்ளது. தனது கிரிக்கெட் பயணத்தில் தோனியுடன் நெருக்கமாக பழகிய தருணங்களை அவர் சமீபத்தில் ஒரு யூடியூப் நேர்காணலில் நினைவுகூர்ந்தார்.
அதில் பேசிய ரஹானே, சுற்றுப்பயணங்களின் போது தோனி தங்கும் ஹோட்டல் அறை பெரும்பாலும் அனைத்து வீரர்களுக்கும் திறந்தே இருக்கும் என்று கூறினார். இளம் வீரர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் அங்கு சென்று அவருடன் உரையாடலாம். கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகள் மட்டுமல்லாமல், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சாதாரண உரையாடல்களிலும் அவர் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும், சில நேரங்களில் 10 முதல் 15 வீரர்கள் வரை ஒரே நேரத்தில் தோனியின் அறையில் கூடி கலந்துரையாடிய அனுபவம் இருப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் முழு அணியினரும் அங்கு இருந்ததாகவும் ரஹானே கூறினார்.
அதேவேளை, தோனியின் அறை கதவு மூடியிருந்தால் மட்டும் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள் என்றும், அவரது தனிப்பட்ட நேரத்தை மதிப்பது அணியினரிடையே எழுதப்படாத விதியாக இருந்ததாகவும் ரஹானே குறிப்பிட்டார்.
ரஹானேவின் இந்த கருத்துகள், தோனியின் தலைமைத்துவம், எளிமை மற்றும் சக வீரர்களுடன் அவர் பேணிய நெருக்கமான உறவு குறித்து ரசிகர்களிடையே மீண்டும் பாராட்டைப் பெற்றுள்ளன.