விரலில் காயம்; பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும் வீரர்களுக்கு பேட்டிங் கோச் ஆன சுப்மன் கில்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், வலைப்பயிற்சியில் தனது சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து 'பேட்டிங் கோச்' ஆக செயல்பட்டுள...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அணிக்கு எதிர்பாராத ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடந்த பயிற்சியின் போது, இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவரால் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிற்சிப் போட்டியில் இருந்து கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவரது இடத்தில் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்தி வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு கில்லின் காயத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
களத்தில் விளையாட முடியாவிட்டாலும், அணிக்கான தனது பொறுப்பை முழுமையாக உணர்ந்த சுப்மன் கில், வலைப்பயிற்சியின் போது தனது சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக, மானவ் சுதர், குர்னூர் பிரார், முகமது சிராஜ் ஆகிய பின்வரிசை வீரர்களுக்கு பேட்டிங் செய்யும் முறைகள் மற்றும் மனநிலை குறித்து அவர் வழிகாட்டி வருகிறார். இது அவரது தலைமைப் பண்பையும், அணி மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பல முக்கிய வீரர்களின் காயங்களால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் காயமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இத்தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் முழுவதுமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். முதுகுவலியால் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பும் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்து 48.15 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. காயங்களின் காரணமாக மாற்று வீரர்களுடன் இந்தத் தொடரில் இந்திய அணி களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.