இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தெரிவாளராக பார்த்திவ் பட்டேல் நியமிக்கப்பட வாய்ப்பு
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைத் தெரிவாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைமைத் தெரிவாளராக பார்த்திவ் பட்டேல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைத் தெரிவாளர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய தலைமைத் தெரிவாளர் அஜித் அகர்கருக்குப் பதிலாக முன்னாள் விக்கெட் காப்பாளர் பார்த்திவ் பட்டேலை நியமிப்பது குறித்து தீவிர பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அஜித் அகர்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஆடவர் சிரேஷ்ட அணியின் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் அக்டோபர் மாத முற்பகுதியில் நிறைவடையவுள்ளது.
அவருக்கு மேலும் ஒரு வருட காலத்திற்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைமைத் தெரிவாளர் ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித இறுதித் தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், தலைமைத் தெரிவாளர் பதவியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்தியாவின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான பார்த்திவ் பட்டேல் அந்தப் பதவிக்கான பிரதான தெரிவாக முன்னிலையில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் 95 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் மும்பையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது தேசிய தெரிவுக்குழுக்கள் தொடர்பான சகல தீர்மானங்களையும் சுயமாக மேற்கொள்வதற்கான முழுமையான அதிகாரம் சபையின் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அஜித் அகர்கர் தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பாரா அல்லது பார்த்திவ் பட்டேல் புதிய தலைமைத் தெரிவாளராகப் பொறுப்பேற்பாரா என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.