சூரியன்-சனி சமசப்தம யோகம்: அடுத்த 30 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
கன்னி ராசிக்குச் சென்ற சூரியனும் மீனத்தில் உள்ள சனியும் இணைந்து உருவாக்கியுள்ள சமசப்தம யோகத்தால் அடுத்த 30 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்த விவரம்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியனும், நீதிமானாக சனி பகவானும் போற்றப்படுகின்றனர். இவ்விரு கிரகங்களும் பரஸ்பரம் பகை கிரகங்களாகக் கருதப்பட்டாலும், அவற்றுக்கு இடையே தந்தை-மகன் உறவு இருப்பதாக நம்பப்படுகிறது. சூரியன் மாதம் ஒருமுறை ராசி மாறும் வழமையில், செப்டம்பர் 17ஆம் திகதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பெயர்ச்சியாகியுள்ளார்.
அதேவேளை சனி பகவான் மீன ராசியில் சஞ்சரித்து வருகின்றார். இதன் காரணமாக சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று ஏழாம் பார்வையாக எதிரெதிரே சஞ்சரிப்பதால் சமசப்தம யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்.
இந்த அமைப்பினால் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்களுக்கு மிக எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய சூழல் நிலவுகின்றது.
மேஷ ராசியின் ஆறாம் வீட்டில் சூரியனும், பன்னிரண்டாம் வீட்டில் சனியும் உள்ளதால் பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளதோடு, கூட்டுத் தொழில் செய்பவர்கள் பணப் பரிவர்த்தனைகளில் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் தலைவலி மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படலாம்.
துலாம் ராசியைப் பொறுத்தவரை சூரியன் பன்னிரண்டாம் வீட்டிலும், சனி பகவான் ஆறாம் வீட்டிலும் அமைந்திருப்பதால் கடும் உழைப்புக்கான பலன் தாமதமாகி ஏமாற்றம் உண்டாகலாம். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பேச்சில் கவனத்தைச் செலுத்துவதும் அவசியமாகும். உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்தாவிட்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், நிதி விவகாரங்களிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
மீன ராசியில் முதல் வீட்டில் சனியும், ஏழாம் வீட்டில் சூரியனும் சஞ்சரிப்பதால் திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழல்கள் உருவாக இடமுண்டு. இதனால் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பதும் பொறுமை காப்பதும் முக்கியமாகும். மேலும், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பு இருக்கும் என்பதால் பொறுப்புடன் கடமைகளை ஆற்ற வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெரிய நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.