மருத்துவ ஆய்வகத்தில் தங்குவதற்கு இடம்கேட்டு முறைகேடாக நடந்துகொண்ட கனேடிய பெண் கைது
கல்கிஸை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் தங்குவதற்கு இடம் கேட்டு முறைகேடாக நடந்துகொண்டதுடன், செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த கனேடிய பெண் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிஸையில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்குள் நுழைந்து தங்குவதற்கு இடம் கேட்டு முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் கனேடிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்குள் சென்று தங்குவதற்கு இடம் கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஊழியர்கள் நிராகரித்த நிலையில், அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து பணியாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டுள்ளார். இதனையடுத்து அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, குறித்த பெண்ணிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு எதுவும் கைவசம் இல்லை என்பதும், அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் அஹங்கம பகுதியில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட கனேடிய பெண் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த காலப்பகுதியில் அவரை வெலிசரவில் அமைந்துள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.