2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவே வேட்பாளர்: மொட்டுக் கட்சி திட்டவட்டம்
2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட்டு வெற்றிபெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்குவார் எனவும், அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலும் தாய்நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்சியின் வேலைத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், புதிய முதலீடுகளையோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களையோ செயல்படுத்தி திறைசேரியை நிரப்புவதற்குப் பதிலாக, பொதுமக்கள் மீது தொடர்ச்சியாகக் கடுமையான வரிகளைச் சுமத்தும் ஆட்சியாகவே தற்போதைய அரசு உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசின் முறையற்ற கொள்கைகள் காரணமாக, பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் மாநாட்டை விவசாய அமைச்சரும் அவரது பிரதி அமைச்சரும் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
மேலும், அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற தமது கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா இராமநாதன் இனவாதத்தையோ பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை என்றும், இனிவரும் காலங்களில் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.