மட்டக்குளி விபத்தில் மூவர் பலி; கார் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பு மட்டக்குளி பகுதியில் மூவர் பலியான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கார் சாரதியை செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதி கஞ்சா போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழக்கக் காரணமான விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கார் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விபத்து இடம்பெற்ற போது கார் சாரதி கஞ்சா போதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு மட்டக்குளி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதி கடுமையான விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மேலும் 10 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ள நிலையில், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.