நாமலை ஜனாதிபதியாக்கும் மக்கள் போராட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

அநுரகுமார திசாநாயக்கவின் அடக்குமுறைக்கு பணியாமல் 2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க அநுராதபுரத்தில் இருந்து போராட்டம் தொடங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.


நாமலை ஜனாதிபதியாக்கும் மக்கள் போராட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என்றும், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான அரசியல் போராட்டத்தை புனித நகரமான அநுராதபுரத்திலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளையும் ஓரணியில் திரட்டுவதாகவும் அக்கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரம் நகரில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ‘மக்கள் போராட்டம்’ பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனா இராமநாதன், டி.வி.சானக, சானக மாதுகொட, கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ், ரமேஷ் பத்திரன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

தற்போதைய ஆட்சியில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அரசியல் பழிவாங்கல்கள் தீவிரமடைந்து அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டதன் காரணமாகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்தத் தடைகளைத் தாண்டி அவரை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்துவதற்கான பிரசார முன்னெடுப்புகள் தொடரும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டிய தருணம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில பேசுகையில், ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு தமது தரப்பு ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கம், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை ஆக்கிரமித்து ஜனநாயகத்தை அழிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எழுச்சியை முடக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் தனது உரையில் எச்சரித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google