'மகன் லஞ்சம் வாங்கும்போது அது தவறு என்று தந்தை கண்டித்திருந்தால் இன்று கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது'

மக்கள் ஆதரவு தமக்கு உள்ளதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சவாலல்ல என்றும், ஊழல்வாதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


'மகன் லஞ்சம் வாங்கும்போது அது தவறு என்று தந்தை கண்டித்திருந்தால் இன்று கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது'

ஊழல்வாதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், மக்கள் தமது பக்கமிருப்பதால் இந்தக் கூட்டணி தமக்கு எந்தவித சவாலையும் ஏற்படுத்தாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவையில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவருடனும் தனிப்பட்ட பகைமை இல்லாததால் பழிவாங்க வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது என்றும், கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட பல வழக்குகள் இரண்டு வருடங்களாக முறையாக விசாரிக்கப்பட்டு தற்போது கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மகன் லஞ்சம் வாங்கும்போது அது தவறு என்று தந்தை கண்டித்திருந்தால் இன்று அவர் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் இது அனைவருக்கும் ஒரு படிப்பினை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 2024 ஆம் ஆண்டு குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து மக்கள் அமைத்த ஆட்சியே இதுவென்றும், ஊழல் மற்றும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

பொருளாதார ரீதியில் வங்குரோத்தான நாட்டைப் பொறுப்பேற்று, வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்தியவாறே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தது போல் எரிபொருள் அல்லது உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றார். 

விவசாயிகளின் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு காணப்படுவதுடன் நெல்லுக்கான உத்தரவாத விலையும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முகாம்களில் வாழும் 13,500 குடும்பங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது என்றும், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களே இன்று ஊடக சுதந்திரம் குறித்துப் பேசி வருவதாகவும் அவர் சாடினார். ஜனாதிபதியாக அரச நிர்வாகத்தையும், தேசிய மக்கள் சக்தியின் தலைவராக அரசியல் பணிகளையும் முன்னெடுத்து மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பேன் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google