இந்திய பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் சென்ற சீன அதிபர்; காரணம் என்ன?

டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.  


இந்திய பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் சென்ற சீன அதிபர்; காரணம் என்ன?

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். 

இச்சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

அத்துடன், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவது இன்றியமையாத அடித்தளம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.  

தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாடுகளின் தேசிய சூழல்கள் வேறாக இருந்தாலும், பொதுவான வளர்ச்சிப் பாதையைத் தொடரவும் ஒருவருக்கொருவர் முழு ஆதரவாக இருக்கவும் முடியும் என்று குறிப்பிட்டார். 

சிக்கலான சர்வதேச சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகளாகவும், குளோபல் சவுத் அமைப்பின் முக்கியப் பிரதிநிதிகளாகவும் திகழும் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க பொறுப்புகளைச் சுமக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.  

இதனிடையே, மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்குச் சென்றதால் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. 

இதேபோன்று, உச்சி மாநாட்டில் பங்கேற்ற அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் மாநாடு முடிந்ததும் நாடு திரும்பியதால் விருந்தில் பங்கேற்கவில்லை.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google