லண்டனில் 22 மாடி குடியிருப்பில் தீ விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்
லண்டன் பிளாக்வால்வே பகுதியிலுள்ள 22 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டனின் பிளாக்வால்வே பகுதியில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே, கட்டடத்தின் 17 ஆவது தளத்தில் அதிகாலை 5 மணியளவில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த போது தீ பரவியதால், குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்துடன் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கித் தப்பியோட முயன்றனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், கட்டடத்திற்குள் சிக்கிய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் இருவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பதுடன், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.