துருக்கியில் தீவிரமடையும் எல்ஜிபிடிகியூ+ ஒடுக்குமுறை: ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கைது, சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்

துருக்கியில் எல்ஜிபிடிகியூ+ ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகளை முடக்கி அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


துருக்கியில் தீவிரமடையும் எல்ஜிபிடிகியூ+ ஒடுக்குமுறை: ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கைது, சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்

துருக்கியில் ஆபாச குற்றச்சாட்டின் கீழ் பத்திரிகையாளர்கள், எல்ஜிபிடிகியூ+ ஆர்வலர்கள் மற்றும் எச்ஐவி விழிப்புணர்வுப் பணியாளர்கள் பலர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. 

சமீபத்திய ஆண்டுகளில் துருக்கியில் எல்ஜிபிடிகியூ+ சமூகத்தினர் மீது முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய ஒடுக்குமுறை இதுவென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தால் குடும்பப் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் 60 முதல் 150 வரையானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் உள்ள எல்ஜிபிடிகியூ+ இரவு விடுதிகள், உரிமை அமைப்புகள் மற்றும் எச்ஐவி தடுப்பு சேவை மையங்கள் மீது தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அங்குள்ள ஆவணக் காப்பகங்களை அதிகாரிகள் சோதனையிட்டு வானவில் கொடிகளைப் பறிமுதல் செய்யும் காட்சிகளை துருக்கிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி சோதனைகளில் தொழில்முறை ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். KAOS GL என்ற உரிமை அமைப்பின் இணையத்தளத்திற்கு ஜார்ஜியா தேர்தல் குறித்து செய்தி எழுதிய ஊடகவியலாளர் துக்பா டெகெரெக், கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஆபாச குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். 

அதேவேளை, தேசிய இணையக் குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் இஸ்தான்புல் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், எல்ஜிபிடிகியூ+ தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்த 419 சமூக ஊடகக் கணக்குகளை முடக்குமாறு இஸ்தான்புல் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதில் செய்தியாளர்கள், ஆர்வலர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பெண்களுக்கான சிவில் சமூக அமைப்புகளின் கணக்குகளும் அடங்குகின்றன.

துருக்கியில் எக்ஸ் தளத்தில் 1.8 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபல ஊடகவியலாளர் சிரின் பய்சினின் கணக்கும் அந்நாட்டில் முடக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைத் தடை செய்வதாலும் கணக்குகளை முடக்குவதாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2014ஆம் ஆண்டு எர்டோகன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், குறிப்பாக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பின் துருக்கியில் மனித உரிமைகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google