லண்டனிலிருந்து பங்களாதேஷ் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்: விசாரணை தீவிரம்
லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிப் பயணித்த பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் இரு பயணிகளிடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனிலிருந்து பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கிப் பயணித்த பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்த வேளையில் இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
அந்த வாக்குவாதம் விரைவிலேயே கைகலப்பாக மாறிய நிலையில், இரு பயணிகளும் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலின் போது ஒரு பயணியின் ஆடை கிழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, சக பயணிகளும் விமானப் பணிப்பெண்களும் உடனடியாக தலையிட்டு இருவரையும் விலக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நடுவானில் பயணிகள் மோதிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.