சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் தீவிரமடையும் எச்.ஐ.வி பரவல்: தேசிய அவசரநிலை பிரகடனம்

பிஜி தீவில் எச்.ஐ.வி தொற்று மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த புதிய மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் தீவிரமடையும் எச்.ஐ.வி பரவல்: தேசிய அவசரநிலை பிரகடனம்

பிரபல சுற்றுலாத் தலமான பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியில் எச்.ஐ.வி தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அங்கு தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 167 பெரியவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்த நிலையில், தற்போது 60 பேரில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இத்தொற்றினால் ஏற்படும் சிக்கல்களால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. பத்து இலட்சத்திற்கும் குறைவான சனத்தொகையைக் கொண்ட இந்நாட்டில், 2025ஆம் ஆண்டில் மட்டும் 2,016 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அந்தோனியோ லலாபலாவு எச்சரித்துள்ளார்.

வழக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இனி பலனளிக்காது எனத் தெரிவித்துள்ள வல்லுநர்கள், போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவை இந்தத் தீவிரப் பரவலுக்கு முக்கியக் காரணங்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, செலவைக் குறைப்பதற்காகவும் ஊசிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகவும், ஏற்கனவே போதையில் உள்ள ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சித் தங்களுக்குள் செலுத்திக்கொள்ளும் 'ப்ளூடூத்திங்' அல்லது 'ஹொட்ஸ்பொட்டிங்' என்ற ஆபத்தான போதைப் பழக்கமே வைரஸ் வேகமாகப் பரவ வழிவகுத்துள்ளது.

இந்த நெருக்கடியைக் கையாளும் நோக்கில் புதிய ஊசி மற்றும் சிரிஞ்ச் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க நாடாளுமன்றத்தினூடாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள பிஜி அரசு திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் பிஜியில் எச்.ஐ.வி தொற்றோடு வாழும் சுமார் 9,100 பேரில் 39 சதவீதமானோருக்கு மட்டுமே தங்களுக்குத் தொற்று இருப்பது தெரியும் என்பதும், 22 சதவீதமானோர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

உலகளவில் சராசரியாக 78 சதவீதமானோர் சிகிச்சை பெற்றுவரும் சூழலில், பிஜியின் இந்த விகிதம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சமூகப் புறக்கணிப்பு மற்றும் பயம் காரணமாக ஒதுங்கிவிடாமல் மக்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என தேசிய எச்.ஐ.வி பணிக்குழுவின் தலைவர் ஜேசன் மிட்செல் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google