நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீட்டிப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 4 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைச்சாலைப் பேருந்து மூலம் இன்று (18) காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் இலஞ்சமாக வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் இருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவன வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்தத் தொகைக்கு நிகரான சுமார் 10 கோடி ரூபாயை நாமல் ராஜபக்ஷ பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.