லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் மனு
பிரித்தானியத் தமிழர்களின் பயணச் சிரமங்களைக் குறைக்கும் வகையில், லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியத் தமிழர்களின் பயண வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குமாறு பிரித்தானியத் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக "யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு மனு ஒன்றையும் அவர் முன்வைத்துள்ளார்.
தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வசதி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான காரெத் தோமஸ், பயணிகள் அனைவரும் கொழும்பு ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் கொழும்பில் தரையிறங்கிய பின்னர் மேலும் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணித்து, வீதி அல்லது தொடருந்து வழியாக யாழ்ப்பாணத்தை அடைய ஆறு முதல் ஏழு மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாகத் திருமணங்கள், சமய வழிபாடுகள், இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணிக்கும் வயதானவர்கள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் இந்த நீண்ட பயணத்தால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்துவதன் மூலம் தேவையற்ற பயண நேரம் பெருமளவு குறையும் என்பதுடன், பிரித்தானியா மற்றும் வடக்கு இலங்கை இடையிலான குடும்ப, சமூக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளும் வலுவடையும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.