மார்பக புற்றுநோயால் உயிரிழந்த சீரியல் நடிகை – சிகிச்சை செலவால் ஏற்பட்ட சோக முடிவு

வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான வாஹினி, தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்ததுடன் சில திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.

மார்பக புற்றுநோயால் உயிரிழந்த சீரியல் நடிகை – சிகிச்சை செலவால் ஏற்பட்ட சோக முடிவு

பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான வாஹினி (பத்மக்கா) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், போதிய நிதி வசதி இல்லாததால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு 48 வயது ஆகும்.

வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான வாஹினி, தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்ததுடன் சில திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமடைந்த நிலையில் அவரது உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாஹினிக்கு அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் மருத்துவ செலவு அதிகரித்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க மேலும் சுமார் 35 லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த அளவிலான தொகையை குடும்பத்தினரால் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

நடிகை கராத்தே கல்யாணி சமூக ஊடகங்கள் மூலம் உதவி கோரி பதிவிட்டதன் மூலம் ஓரளவு நிதி திரட்டப்பட்டாலும் அது முழுமையான சிகிச்சைக்கு போதுமானதாக அமையவில்லை. இதனைத் தொடர்ந்து வாஹினி வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

வாஹினியை காப்பாற்ற முயற்சி செய்ததாக நடிகை கராத்தே கல்யாணி உணர்ச்சி வசப்பட்ட பதிவை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், வாஹினியை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகவும், அவரது மறைவு பெரும் இழப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாஹினியின் மரணம், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து சமூகத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.