டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம்… நிசாங்கா படைத்த வரலாற்றுச் சாதனை
நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு முக்கியமான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அரைசதங்கள் அடித்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.
182 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்தது. பதும் நிசாங்கா 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபுறம் குசால் மெண்டிஸ் 35 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிப் பயணத்தை வேகப்படுத்தினார். குசால் மெண்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தாலும், நிசாங்கா தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார்.
நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் மூலம் பதும் நிசாங்கா ஒரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன், 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மஹேலா ஜெயவர்த்தனே ஜிம்பாப்வேக்கு எதிராக சதம் அடித்திருந்தார். மேலும், டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் நிசாங்காவின் பெயரில் சேர்ந்துள்ளது.
இந்த வெற்றியும், நிசாங்காவின் சாதனையும் இலங்கை அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
