அடுக்குமாடியில் இருந்து விழுந்த சீமெந்து கலவை; 7 வயது சிறுவன் காயம்: கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்
கடைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் சீமெந்து கலவை விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சீமெந்து கலவை உடைந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (04) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முகத்துவாரத்தில் உள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 7ஆம் மாடியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது. அந்த நேரத்தில் கடைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் சீமெந்து கலவை விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த சிறுவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
