ஜூஸில் மயக்க மருந்து கலந்து முதிய பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை
11.00 மணியளவில் பயணிகள் பேருந்தில் பயணம் தொடங்கி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்துள்ளார்.
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திற்குச் செல்ல பிரதான பஸ் நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய முதிய பெண்ணிடம் மயக்க மருந்து கலந்த ஜூஸ் வழங்கி, அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவம் புதன்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய கல்லாறு பகுதியில் வசிக்கும் குறித்த பெண், தனது உறவினர் வீட்டிற்கு செல்லுவதற்காக அன்றைய தினம் காலை 11.00 மணியளவில் பயணிகள் பேருந்தில் பயணம் தொடங்கி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்துள்ளார். புதூருக்கு செல்லும் பேருந்து முன்பே சென்றுவிட்டதால், அடுத்த பேருந்துக்காக அவர் அங்கு காத்திருந்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் பெண், முதியவருடன் உரையாடி, அப்பகுதியில் கொள்ளையர்கள் அதிகம் இருப்பதாக கூறி தங்க ஆபரணங்களை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் அவர் கொண்டுவந்த ஜூஸை குடிக்குமாறு பலமுறை கேட்டதையடுத்து, முதியவர் அதை குடித்துள்ளார்.
ஜூஸை குடித்ததன் பின்னர் முதியவர் மயக்கமடைந்த நிலையில், அவரிடம் இருந்த சுமார் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 அரைப் பவுன் எடையுடைய இரண்டு காப்புகள் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை அந்த பெண் கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மாலை 5.30 மணியளவில் அங்கு வந்த மற்றொரு பெண், முதியவர் மயக்க நிலையில் கிடந்ததை கவனித்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
