டி20 உலகக்கோப்பை சூப்பர் 8: இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு, பாகிஸ்தானுக்கு சிக்கல்!
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது சூப்பர் 8 கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது சூப்பர் 8 கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினை இந்திய அணிக்கு சாதகமாக அமைய, பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த அழுத்தமான சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் 1 பிரிவில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா மட்டுமே வலுவான சவாலாக கருதப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் திறமையானவை என்றாலும், தற்போதைய இந்திய அணியின் சமநிலை மற்றும் ஆற்றலை கருத்தில் கொண்டால், அவற்றை சமாளிப்பது சாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தாலும், இந்தியாவின் பல்துறை திறனை எதிர்கொள்வது சுலபமல்ல. மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்றாலே இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகம்.
மறுபுறம், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள குரூப் 2 பிரிவு கடினமானதாக அமைந்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இதில் உள்ளன. இலங்கை அணி வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையுடன் வந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளில் போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி வீரர்கள் உள்ளனர். லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், கடைசி நேரத்தில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இந்த நிலையில், மூன்று பலமான அணிகளை எதிர்கொள்வது அவர்களுக்கு கடின சவாலாக இருக்கும். இரண்டு வெற்றிகளைப் பெறுவது கூட சிரமமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த பிரிவு வித்தியாசத்திற்கு காரணம் ஐசிசியின் முன்தர நிர்ணய (Pre-seeding) முறை. தொடருக்கு முன்பே அணிகளின் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் வெளியேறியதால் ஜிம்பாப்வே முன்னேறியது. இதுவே இந்தியாவுக்கு சாதகமான மாற்றமாக அமைந்தது.
இந்திய அணியின் அட்டவணைப்படி, பிப்ரவரி 22 அன்று அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவை, பிப்ரவரி 26 அன்று சென்னையில் ஜிம்பாப்வேயை, மார்ச் 1 அன்று கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா சந்திக்கிறது.
லீக் சுற்றில் தோல்வியறியா அணியாக முன்னேறிய இந்தியா, சூப்பர் 8 கட்டத்திலும் அதே ஆட்டத்தைத் தொடரும் நம்பிக்கையில் உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியையும் தீர்மானிப்பானதாக அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
