மீண்டும் களமிறங்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய தகவல்!

Key Points
  • 18வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அ...
மீண்டும் களமிறங்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய தகவல்!

18வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த மூன்று போட்டிகளாக அணியை எம். எஸ். தோனி தான் வழிநடத்தி வருகிறார். சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது மட்டுமல்லாமல், மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப்-க்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் உள்ளது. 

ருதுராஜ் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகி இருந்தாலும், அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதேபோல் பயிற்சி முகாமிலும் ருதுராஜ் பயிற்சி பெற்று வருகிறார். 

இதனால் ருதுராஜ் இந்த தொடரில் ஏதேனும் ஒரு போட்டிகளில் மீண்டும் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது. இந்த நிலையில், இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். 

ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. அவரால் இனி நடப்பாண்டில் எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலையே தொடர்கிறது. 

ருதுராஜ் எங்கள் அணியின் மிக முக்கியமான வீரர். எங்கள் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதல் அணிக்கு தேவை. அணியில் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்குவதற்காகவே அவர் அணியுடன் தொடர்ந்து பயணிக்கிறார். 

லீக்கில் மீதம் 6 போட்டிகள் உள்ளன. வெற்றி பாதைக்கு திரும்ப நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் பெற வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். 

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் கண்டிப்பாக இருக்கும். வெற்றி பெறும்போது அதற்கான பாராட்டும் தோல்வி அடையும் போது அதற்கான விமர்சனங்களும் வரதான் செய்யும். 

ஆனால் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. 2010ஆம் ஆண்டு கூட இதேபோல் தான் தொடர் தோல்விகளை சந்தித்தோம். 

ஆனால் அதன்பின் வெற்றி பெற்றோம். எனவே வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது என காசி விஸ்வநாதன் கூறினார்.  

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google