IND vs PAK உலகக்கோப்பை போட்டி ரத்தானால் ரூ.4,500 கோடி இழப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் நெருக்கடி
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் அரசியல் முடிவாக மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் அமைப்புகளுக்கு மிகப் பெரிய நிதி இழப்பை உருவாக்கும் சூழ்நிலையாக மாறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தானால் சுமார் 4,500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் International Cricket Council கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீண்டகால விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இந்த முடிவு உலக கிரிக்கெட் அமைப்பையே பாதிக்கும் என்றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியே அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கியமான ஆட்டமாகக் கருதப்படுகிறது. இந்த ஒரே போட்டியின் வர்த்தக மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4,500 கோடி ரூபாயாகும். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை மற்றும் உபசரிப்பு துறை வருமானம் ஆகியவை பெரும்பாலும் இந்தப் போட்டியைச் சார்ந்தே இருக்கின்றன. வேறு எந்தக் கிரிக்கெட் போட்டிக்கும் இதற்கு இணையான வர்த்தக மதிப்பு கிடையாது.
இந்தப் போட்டி ரத்தானால் முதன்மையாக பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனங்களாகும். இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது, வெறும் 10 விநாடி விளம்பரத்திற்கே 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தொகை, உலகக்கோப்பை இறுதிப்போட்டியைவிட கூட அதிகமாக இருக்கும். போட்டி நடைபெறாவிட்டால், விளம்பர வருவாயில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள JioStar நிறுவனம், ஐசிசியிடம் நஷ்ட ஈடு கோர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐசிசிக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் பெரும் பகுதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி மூலமே உருவாகிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐசிசி உறுப்புநாடுகளுக்கு வழங்கும் நிதியிலும் குறைவு ஏற்படும். குறிப்பாக, ஐசிசி நிதியை மட்டுமே நம்பி இயங்கும் சிறிய கிரிக்கெட் நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தப் போட்டி ரத்தானால் Board of Control for Cricket in India மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டுக்கும் தலா சுமார் 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருக்கும் பிசிசிஐ இந்த இழப்பை எளிதில் சமாளித்துவிடும். ஆனால் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இது கடும் சுமையாக மாறும்.
ஐசிசியின் மொத்த வருவாயில் 5.75 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு சுமார் 280 கோடி ரூபாயாகும். ஐசிசி விதிமுறைகளை மீறி போட்டியை புறக்கணித்தால், இந்த நிதியை ஐசிசி நிறுத்தி வைக்கக்கூடும். மேலும் ஒப்பந்த மீறலுக்காக அபராதம், சட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நிதியுதவி ரத்து போன்ற கடுமையான விளைவுகளையும் பாகிஸ்தான் சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலை உருவானால், அது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் அபாயம் உள்ளது.
